ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில்

கொங்கு நாட்டின் பொதுவான தெய்வமும் தேசியத் தெய்வமும் செல்லாண்டியம்மன் தெய்வமாகும் செல் என்பது வளத்தைக் குறிக்கும். செல்லாண்டியம்மன் செல்லாயி என்றும் அழைக்கப்பெறும். கொங்கு வேளாளர்களில் பெருவாரியான குலங்கள் வழிபடும் தெய்வம் செல்லாண்டியம்மனே, கொங்கு நாட்டில் எங்கெங்கும் குடிகொண்டு செல்லாண்டியம்மன் அருள் பாலித்தாலும் மூலக் கோயில் காவிரிக்கரையில் உள்ள மதுக்கரைச் செல்லாண்டியம்மனே ஆகும்.

மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோயில் சேர, சோழ, பாண்டிய நாடு எல்லையில் உள்ளது என்பர் மூவேந்தர்கட்கும் எல்லைத்தகராறு வரவே மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் கொங்கு வேளாளர் கோலாத்தாக் கவுண்டர் மூவேந்தர்கட்குப் பாகம் பிரித்தார் என்று அண்ணன்மார் வரலாற்றில் கூறப்படுகிறது. தட்டய நாட்டார் தெவத்திலும் இச்செய்தி குறிப்பாகச் சுட்டப்படுகிறது.

‘மண்ணைப் பிரித்த மதுக்கரைச் செல்லாயி’ என்ற புலவர் வாக்கால் உணரலாம். கொங்கு நாட்டுப் பல்வேறு பட்டயங்களில் செல்லாண்டியம்மன் இரட்சிக்க வேண்டும் என்று முடிவு பெருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் ஆடவர்களும், பெண்டிரும் செல்லாண்டியம்மனின் பெயர் அடிப்படையில் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர்.

செல்லாண்டியம்மன் மீது பல சிற்றிலக்கியங்கள் உள்ளன அந்த வகையில் நாகம்பள்ளிச் செல்லாண்டியம்மனும் ஆதி அந்துவன் சாத்தந்தை, பூச்சந்தை குலத்தாருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறது. செல்வ விநாயகர், சந்தனக்கருப்பண்ணன். களித்திண்ணி மன்னன் என்பவை அருள்பாத்து விளங்குகின்றன. சந்தன் கருப்பண்ணனும் களித்திண்ணி மன்னனும் அவருமாக இருந்து உருவம் பெற்றுள்ளனர்.

செல்லாண்டியம்மன் மூலக் கோயிலாகச் சிறப்புடன் விளங்குகிறது. எதிரில் சிங்கவாகனம் சீருடன் உள்ளது. மதுரைவீர சாமியும் உள்ளது. சந்தன கருப்பண்ணனுக்கும், அணைக் கருப்பண்ண சுவாமிக்கும், மதுரைவீர சுவாமிக்கும் 3 கிடாய்கள் வெட்டப்படுகின்றன. துர்க்கையம்மன் கோயில் உள்ளது.

இராஜகோபுரம் முன்பு பின்னப்பட்டது அழகிய வண்ணப்பூச்சுடன் திகழுகிறது. குதிரை, தூரி வாகன மண்டபம் ஆகியவை உள்ளன. தொன்மையான தூண்கள் பல ஆங்காங்கே உள்ளன. அடியார்கள், காலிங்க நடனம் குரங்கு முனிவர், சுந்தரரும், முதலைவைப் பிள்ளையும், யானை, மதுரைவீரன் ஆகியோர் சிற்பங்கள் உள்ளன.

செல்லாண்டியம்மன் கோயில் இடம் அகன்று பரந்துப்பட்டுப் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கட்குப் பெரிதாக பற்பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்லாண்டியம்மன் திருப்பணிக் குழுவின் கூட்டம் 7-7-1985 இல் நடைபெற்றது. 15-11-1985 இல் தவத்திரு. சுந்தர சுவாமிக்களால் பாலாலயம் எடுக்கப்பெற்றது.

பாலாலயம் எடுக்கபெற்றுச் சுமார் ஐந்தாண்டுகளில் செல்லாண்டியம்மன் கோயில், சந்தனக்கருப்பண்ணன் கோயில், களித்தின்னி மன்னன் கோயில், மதுரை வீரசுவாமி கோயில்கள் அனைத்தும் காணியாளர்கள் பொருட்கொடையால் மிகச் சிறப்பாகத் திருப்பணி செய்யப்பட்டுச் சீரோடும் சிறப்போடும் 31.1.1990 அன்று குடமுழக்கு விழா தக்க சிவாச்சாரியார்களால் நடைபெற்றது.


அணைக்கருப்பண்ண சாமி

கருப்பண்ணன் அல்லது கருப்பராயன் கோயில் கொங்கு வேளாளர்கட்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த கோயில் கொங்கு வேளாளர்கள் சைவ-வைணவம் வேறுபாடு காட்டுவது இல்லை எத்துணை இராமசாமியும் லட்சுமண சாமியும் உள்ளனர். கருப்பசாமி வைணவச் சார்புடைய தெய்வமே. கிருஷ்ணன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழகமே கருப்பண்ணன் என்பது பல கருப்பணசாமியின் நெற்றியில் திருநாமம் பொறித்திருப்பதைக் கண்டுள்ளோம்.

இங்கு பழமையான அணை ஒன்று முன்பு இருந்துள்ளது. இப்போது மிகவும் சிதைந்த நிலையில் அதன் இடிபாடுகளை காணுகின்றோம். இந்த அணையிலிருந்து தென்கரையில் 5 மைல் நீளத்திற்கு வாய்க்கால் ஒன்று முன்பு சென்றதாகக் கூறுகிறார்கள். அதற்குரிய அடையாளம் இன்றும் உள்ளது.

இந்த அணையின் காவல் தெய்வமாகக் கருப்பண சுவாமி இருந்திருக்க வேண்டும் எனவே தான் அணைக்கருப்பணசாமி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அணைக் கருப்பணசாமிகோயில் முன்பு ஆற்றிலுள்ள அணை அருகில் கரையில் இருந்தது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த காலங்களில் கோயிலுக்குச் செல்லுவதும் வழிபடுவதும் மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர்தான் இப்போது உள்ள இடத்திற்குக் கோயில் மாற்றம் பெற்றது.

பல காலம் பச்சைப் பந்தலிலேயே அணைக்கருப்பணசாமி வீற்றிருந்து பக்தர்கட்கு அருள் பாலித்து வந்தார். கோயில் கட்டுவதற்கு எவ்வளவோ முறை வாக்குக் கேட்டும் அனுமதி அளிக்கவில்லை. 1957 ஆம் ஆண்டில் அன்பர்கள் சகுனம் கேட்டுப் பின்னர் கொடுமுடி விருந்தியாபாளையம் கருப்பாயி அம்மாள் அவர்களால் இப்போதுள்ள திருக்கோயில் கட்டப்பட்டது அவர்கள் அந்துவகுலம்.

வெளியே உள்ள குதிரைகள் பலருடைய திருப்பணிகளால் உருவாக்கப் பெற்றவை வடிவுள்ள மங்கலம், கோடங்கிப்பட்டி, ராமகவுண்டன்புதூர், இச்சிப்பட்டி போன்ற பல ஊர்க்காணியாளர்கள் திருப்பணி செய்துள்ளனர். ஒன்றில் 1-1-73 என்ற தேதி காணப்படுகிறது.

இங்கு அமராவதி ஆறு தெற்கு வடக்காக ஓடுகிறது கருப்பணசாமி கிழக்கு நோக்கி அருள்பாலித்து எழுந்தருளியுள்ளார். தூரி, வேல் நாகர் ஆகியவை சிறப்பிடம் பெற்றுள்ளன. வடக்குப் பார்த்து பிராமி, மகேசுவரி கௌமாரி வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிமார் என்னப்படும் அன்னையர் எழுவரின் திருவுருவங்கள் உள்ளன. மதுரைவீரனும் இங்குப் பரிதிட்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்குச்சுவர்ப்பகுதிகள் 29-7-54 இல் தொடங்கி 21-5-55 இல் முடிவுற்றதாக ஒரு எழுத்துப் பொறிப்புக்கூறுகிறது.